Wednesday 12 October 2011

நன்றும் இன்றே செய் ! இன்றும் இன்னே செய் ! - நிச்சயமாக உங்கள் வாழ்க்கைக்கு மாபெரும் பொக்கிஷம் !


நன்றும் இன்றே செய் ! இன்றும் இன்னே செய் ! - நிச்சயமாக உங்கள் வாழ்க்கைக்கு மாபெரும் பொக்கிஷம் !

Oct 11, 2011

வாசக அன்பர்களுக்கு என் பணிவான வணக்கம்..! என்னடா, இந்த மாசம் தொடங்கி பத்து நாள் ஆச்சே, இன்னும் ஒரு கலக்கல் கட்டுரை கூட வரலையேன்னு நெனைச்சுக்கிட்டு  இருந்து இருப்பீங்க..... ( என்னது , இல்லையா? அட , எப்போவாவது மறந்து ..... இல்லையா? சரி , விடுங்க)   அதனாலே என்ன , படிச்சதுக்கு அப்புறம், நீங்க ஒரு பத்து நிமிஷமாவது யோசிப்பீங்க , கண்டிப்பா... ! இந்த கட்டுரை, நீங்க எப்போ படிச்சாலும், உங்களுக்கு , உற்சாகம் அளிக்ககூடிய, ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கட்டுரையா இருக்கும்... அதுக்கு நான் உத்திரவாதம்..!
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQdh2aoPmRkRRBTFqr_LmmsX_yNHl5_XO-Vq_GE-riCUinU9LGE

இங்கே நான் சொல்லப்போற , ஏற்கனவே நான் எழுதி இருக்கிற பல விஷயங்கள் - எத்தனையோ புத்தகங்கள்ளே படிச்சதா இருக்கலாம் . பெரிய பெரிய ஞானிகளின் பல வருட ஆராய்ச்சிக்குப் பின் கிடைத்த பொக்கிஷங்களா இருக்கலாம். என்னுடைய அனுபவத்தில், நான் பட்டு, உணர்ந்து கிடைச்ச தகவல்களா இருக்கலாம். இல்லை, உங்களைப் போல நண்பர்கள் , அனுப்பி வைத்த சிறந்த கருத்துக்களா இருக்கலாம்.  நான் உங்க கிட்டே பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே.. நம்ம கட்டுரைகளை எல்லாம் படிச்சுட்டு , நான்  ஏதோ பெரிய பிஸ்தான்னு நினைச்சுக்கப் போறீங்க... ! நானும் உங்களை மாதிரி ஒரு சாதாரண ஆளுதான்.. ஏன், உங்களை விட கம்மியா விஷயம் தெரிஞ்சவன் தான். ... ஆனா, உங்களை மாதிரியே, ரொம்ப ஆர்வமா, இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தேடிக்கிட்டு இருக்கிற, அந்த இறை சக்தியை உணரனும்னு துடிக்கிற , இன்னும் கொஞ்சம் நல்லவனா ஆகணும்னு நினைக்கிற , மனிதம் வளர்க்கணும்னு நெனைக்கிற ஒரு சாதாரண ஆளு.... ஏதாவது தவறுதலா கருத்துக்கள் இருந்தா தயவு செய்து சுட்டிக் காட்டுங்க, திருத்திக் கொள்கிறேன்.! இந்த இரண்டாம் ஆண்டு பயணம் , ஒரு சுவாரஸ்யமான , பயணமாக இருக்க  , அந்த இறை என்னுடன் தொடர்ந்து இருக்க பேராசைப் படுகிறேன்!

சரி, மேட்டருக்குப்  போகலாம்!

ஆலயம் என்றால் என்ன? ஏன் நாம அங்கே போகணும்? நம்ம மதத்தில மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்? கடவுள் நிஜமாவே இருக்கிறாரா/ அப்படி இருந்தா, அவர் எங்கும் இருப்பவர்னா, அப்புறம் ஏன் கோவில்ல மட்டும் நாம போய் கும்பிடனும் ?  மத்த இடங்கள்...? இப்படி உங்களைப் போலவே பல கேள்விகள் எனக்கும் உண்டு.... பொறுமையா, ஒவ்வொரு விஷயமா பார்ப்போம்...!

இந்த கம்ப்யூட்டர் இருக்கு. அப்படினா இதை ஒருத்தர் உருவாக்கி இருக்கணும். இந்த மேஜை, நாற்காலி இருக்கு. இதை ஒரு தச்சர்தான் உருவாக்கி இருக்கணும். ஒரு பொருள் இருந்தா , அதுக்கு ஒரு காரணகர்த்தா உண்டு. அதே மாதிரி, இந்த பூமி, வானம், சூரியன், நட்சத்திரம், அண்டம், பேரண்டம் எல்லாம் இருந்தா , அதுக்கும் ஒரு காரண கர்த்தா இருக்கணும், இருந்தே ஆகணும்....


அப்படி உங்களையும் , என்னையும் இந்த உலகத்தையும் உருவாக்கிய பரம்பொருள் தான் , கடவுள்...! (அப்படின்னு நான் சொல்றேன். நீங்க உங்களுக்கு தோணுன பிறகு சொல்லுங்க போதும் . நாம எல்லாரும் கடவுளின் குழந்தைகள். இறை நம் அனைவரின் உள்ளும் நிறைஞ்சு இருக்கு. ஆபடிப்பட்ட நாமே , மனசு அறிஞ்சு ஏதாவது தப்பு செய்யலாமா? )


அப்போ அவர் எவ்வளவு  பெரிய மகா சக்தி...!  எப்படி இருந்தா, அவர் இத்தனையையும் கட்டிக் காக்க முடியும்..! நாம என்னடான்னாக்க , நம்ம வீட்டை , ஆபீஸை  கட்டுக் கோப்பா வைக்கிறதுக்குள்ளவே , முழி பிதுங்குறோம்...!  

கடவுள் - இந்த உலகத்தை எப்படி சமாளிக்கிறார்னு பாருங்க... !


ஒவ்வொரு ஜீவ ராசிக்கும், அது ஜனிக்கிறப்போவே ஒரு சார்ட் , அதுதாங்க, ஜாதகம்...உண்டு. மனுஷனா இருக்கிறதால, நமக்கு சிந்திக்கிற அறிவு இருக்கிறதால  , ( நமக்கு எல்லாம் ஆறறிவாம்ல) , நம்ம முன்னோர்கள் இதுல எதோ விஷயம் இருக்குதுன்னு , கண்டு பிடிச்சு சொல்லி இருக்கிறாங்க... நாம தான் அதை பெரிசா எடுத்துக்கலை... 

ஒவ்வொரு மனுஷனோட உடம்புலயும், ஒன்பது சக்கரம் சுழலுதாம். நாம பிறக்கும்போது, இந்த ஒன்பது கிரகங்கள் எங்கே , எங்கே இருக்குதோ, அதுக்கு ஏத்த படி இந்த சக்கரங்கள் நம்மை சுழட்டுவித்து - நீ இப்போ இதை செய், இதை செய்யாதேன்னு கொஞ்சம் , கொஞ்சமா ஆட்டுவிக்குது,,, நம் எண்ணங்கள் உள்பட... இதற்க்கு பஞ்ச பூதங்களால் ஆன நம் உடம்பு , இயற்கைக்கு கட்டுப் படுது.  சனி , செவ்வாய் , குரு இந்த மாதிரி கிரகங்கள் உண்டு தானே... கிரகணம் உட்பட...! 

நீங்கள் இயற்கையிலிருந்து  , பஞ்ச பூதங்களில் இருந்து எதை எடுத்தாலும், இந்த நவ கோள்களின் பிடியில் வந்து விடுகிறீர்கள்.

பெரிய , பெரிய முனிவர்கள், ரிஷிகள் - உன்னை உணர் , உன்னை உணர்னு சொல்றது இதைத்தான்... இந்த சக்கரத்தை நாம உணர்ந்து - உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் அந்த சக்தியை , உபயோகப் படுத்துனு சொல்றாங்க... யோக, பிராணயாம பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கிறதும் இதைத்தான்.. !
இயற்கை , நவ கிரகங்கள் எல்லாம் வெளிப்படுத்துற சக்தியை , இந்த சக்கரங்கள் வாங்கி, நம்மளை செயல் பட வைக்குது... இது நல்ல வகையில் செயல் நடத்த , நமது பூர்வ ஜென்ம வினைகளைப் பொறுத்து அது அமைகிறது...! 

ஜாதகம், வாஸ்து , அதிர்ஷ்ட்டக் கற்கள் எல்லாம் ஒரு பாதினு வைச்சாக் கூட, மீதி பாதி , உங்க கையில தான் இருக்குது..! போன ஜென்மத்து வினைகள் , கடுமையா இருந்தாக் கூட , தெளிவான மன திடத்துடன், சிந்தனையுடன், உங்கள் உடல்  நலம் பற்றிய அக்கறையுடன் , திட்டமிட்டு , முடிவு எடுத்தாலும், நீங்கள் வெற்றி பெற முடியும்.. ! என்ன , கடினமாக போராட வேண்டி வரும்..!


இதையே , போன ஜென்மத்து புண்ணியம் நிறைய வைத்து இருப்பவர்கள், உங்களில் கால்வாசி முயற்சி செய்தாலே , உங்களை தாண்டிப் போக முடியும்... ! அப்போ, நம்ம முயற்சிக்கு என்ன பலன்னு கேட்காதீங்க...! நடந்து  முடிந்த விஷயங்களைப் பற்றி , யோசித்து என்ன பண்ண முடியும்? இனிமேலாவது , நல்ல காரியங்களை செய்து , புண்ணியக் கணக்குல கொஞ்சம் வரவு  வைப்போம்... !  பாவக் கணக்கை இது தாண்டி வந்திடுச்சுனா, எப்போ வேணும்னானாலும், அது உங்களுக்கு பயன் தருமே ! 

அதனாலே , ஜாதகத்தைப் பார்த்துட்டு - எந்த ஜோதிடரும் , ஒன்னும் சரியா இல்லையேப்பா ன்னு சொன்னாக் கூட , மனம் தளர்ந்து போகாம , தைரியமா , முயற்சி செய்யுங்கள்.. இன்னும் ஒரு பாதி இருக்கு....


நடந்தவை போகட்டும். இனிமேல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களும், புண்ணிய செயல்களும், தர்ம காரியங்களும் - உங்களுக்கு அடுத்த ஜென்மம் வரை கூட , துணை வரும். உங்கள் சந்ததியையும் காக்கும்.


இது எல்லா விஷயமும் , நம்ம முன்னோர்களுக்கும் தெரியும்.ஆனால், ஏதோ காரணங்களுக்காக , பல புராணக் கதைகளோட அதை மிக்ஸ் பண்ணி, மிகை படுத்தி , ஒரு கேலிக் கூத்தா, நம்பவே கொஞ்சம் கடினமா ஆக்கிட்டாங்க..!


கோவில்கள் எதற்கு தேவை?
சுதி, லயம் எல்லாம் சேர்ந்தாதான் , பாட்டு. அது மாதிரி,ஆண்டவனை , ஆள்பவனை , ஆளப் போகிறவனை சரியான விகிதத்தில் வைத்து இருக்கும் இடம் தான் ஆலயம். இப்படிப் பட்ட ஒரு ஆலயத்தில் நீங்கள் உள்ளே நுழையும்போதே , உங்கள் உடம்பில் சுணங்கிக் கொண்டு இருக்கும் சக்கரம் சீராக சுழல ஆரம்பிக்கும். உங்களுக்கும் தெளிவு கிடைக்கும் . நீங்களும் சுய, புத்தியுடன் செயல் பட ஆரம்பிப்பீர்கள்.   


இப்படி , மிக சரியான விகிதத்தில் அமைந்து இருக்கும் ஆலயங்கள் இந்தியாவில் , ஏராளம். இந்த ஒரு விஷயத்தை நாம் புரிந்து இருப்பதைவிட, நம் எதிரி நாடுகள் தெளிவாகப் புரிந்து , பொறாமையில் புழுங்கிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக , நம் தென் இந்தியாவில் இப்படிப் பட்ட ஆலயங்கள்  அதிகம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் , பாலை என ஐந்து இயற்கை நிலங்களும் இங்கு அதிகம். பாலை நிலமா ? கடற்கரை கூட பாலை தான்.


இப்படிப்பட்ட மகத்தான ஒரு பூமியில் தான் நாம் பிறந்து இருக்கிறோம். இல்லை , போன ஜென்மத்தில் பிறந்து இருப்போம்... இல்லைனா, நீங்கள் இப்போது எப்படி தமிழில் பேச, படிக்க முடியும்?


அந்த பரம்பொருளின் மகத்தான ஆசி பெற, ஐதீக முறைப்படி அமைந்த ஆலயங்கள்  இங்கு இருப்பதைப் போல , உலகில் வேறு எங்கும் கிடையாது. இன்றைக்கும், அயல் நாடுகளில் வசிக்கும் அன்பர்கள் நம் தமிழ் நாடு வந்தால்,  அது ஒரு கோவிலுக்குப் போக வேண்டும் என்கிற எண்ணத்தை உள்ளடக்கியே இருக்கும்.


நம் ஊரில் இருக்கும் நண்பர்களுக்குத்தான் இந்த ஆலயங்களின் மகிமை புரிவதே இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கும், பிற மதத்தவர்கள் வாரம் தவறாமல் , அவரவர் கடவுளை வணங்கினாலும் , நமக்கு பிரதோஷம், பௌர்ணமி கூட ஒரு பெரிய விஷயம் இல்லை.


இந்த மாதிரி விசேஷமான நேரங்களில், விசேஷமான ஆலயங்களில் நாம் இருந்தாலே போதும், நமக்கு நம் கர்ம வினைகளின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும். 


நம் மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?

ஒரு வீடு என்று இருந்தால் , எப்படி ஹால் , பூஜையறை, சமையலறை , தூங்கும் அறை என்று இருக்கிறதோ, அதன் மூலம் குறிப்பிட்ட பலன்கள் நாம் அனுபவிக்கிறோமோ, அதைப் போல - ஒவ்வொரு தெய்வத்திற்கும் , சில குறிப்பிட்ட வரங்களை அளிக்கும் ஆற்றல் இருக்கிறது. இதனால் தான் , பலப் பல ஆலயங்கள் , பலப்பல தெய்வங்கள் நம் முன்னோர்களால் வழிபடப்பட்டு இருக்குமோ என்கிற எண்ணம் தலை  தூக்குகிறது. 


சரி, மனிதனாகப்  பிறந்தவர்களுக்கு எந்த தெய்வத்தை வணங்கினால் நல்லது என்று பார்த்தோமேயானால் - மகத்தான ரிஷிகள் அனைவரும் அறிவுறுத்துவது - கால பைரவரையே.  இவர் தான் சனி பகவானின் குருவாக கருதப்படுபவர். கர்ம வினைகளை அறுப்பவர் இவரே. நாம் எத்தகைய கொடிய பாவங்களை முன் ஜென்மங்களில் செய்து இருந்தாலும், அவற்றின் தாக்கத்தை குறைத்து , நமக்கு கிடைக்கவேண்டிய பலன்களை அள்ளிக் கொடுப்பவர். சிவ சொரூபங்களில், விரைவில் பலன்களை  தருபவர் பைரவர்தான். 


பைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமி தினம் , மிக உகந்தது. வீட்டில் வைத்து பைரவரை வணங்க இயலாது. பைரவ மூர்த்தத்தில் - சொர்ண ஆகர்ஷண பைரவரை மட்டும் வீட்டில் வைத்து வணங்கலாம். இவரது படம் வீட்டில் இருந்தாலே போதும். உங்களுக்கு பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். முறைப்படி , வழிபடத் தொடங்கி , நம்பிக்கையுடன் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் , உங்களுக்கு மகத்தான வெற்றியை தேடித் தரும்.


விதிப்படி நடப்பதை நாம் தடுக்க முடியாது. உங்களுக்கு ஒரு இழப்பு, பிரிவு , துக்கம் ஏற்பட வேண்டுமெனில் , அது நடந்தே தீரும். அப்ப, இறைவனை வழிபடுவது எதற்கு என்று கேட்கிறீர்களா? இழப்பதை தடுக்க முடியாது தான், அது பூர்வ ஜென்ம வினை. ஆனால், இந்த தெய்வ வழிபாடு உங்களுக்கு வரவிருக்கும் வாய்ப்புகளை விரைவில் கொடுக்கும். உதாரணத்திற்கு , உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பு இருக்கும் என்றால், ஏதோ ஒரு வகையில் , உங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரவு வர வைக்கும். இப்போது, உங்களால் இழப்பை ஈடு செய்ய முடியும் அல்லவா? 


ஒரு பெண்ணை மனதார விரும்புகிறீர்கள் , என்று வைத்துக் கொள்வோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் , அவரை மணம் முடிக்க இயலவில்லை. காதல் தோல்வியில் முடிகிறது. அது உங்கள் வினைப் பயன். மனம் தளராது , நீங்கள் இறைவனைப் பற்றி நிற்கும் பொழுது, அவர் உங்களுக்கு அந்த பெண்ணை விட , அற்புதமான வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பார். உங்கள் மனம் மகிழ்ந்து , ஏற்கனவே இருந்த வலி , துயரம் மறைந்துவிடும். 


அதை விட்டு , துயரம் வலி வந்தால்  - மதுவின் பிடியில் மாட்டிக்கொண்டு விட வேண்டாம். வாழ்க்கையில் வேதனைப்படும் சம்பவங்கள் எது நிகழ்ந்தாலும், உங்கள் பூர்வ ஜென்மை வினை குறைகிறது என்று மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு , இறைவனை இன்னும் தீவிரமாக பற்றிக் கொள்ளுங்கள். 


இடுக்கண் வருங்கால் நகும் அளவுக்கு, நாம் இன்னும் போகவில்லை. வலி , வேதனை இருந்தாலும், தினமும் இறைவனை நினைத்து அவன் பொறுப்பில், விட்டுவிடுங்கள். முடிந்தால் தினமும் அவனைப் பார்த்து வாருங்கள். இல்லையா, வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக செல்லுங்கள். அழுகிற  புள்ளைக்கு தான் பால் கிடைக்கும். மனதில் , ஆழத்தில் உங்கள் அழுகை தீராமல் இருக்க வேண்டும். கடவுளை பார்க்கும்போதே , கண்ணிலேயே உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள்.   உங்களைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும்,அந்த இறைவனுக்கே மனது பதற வேண்டும். என்னடா, நாள் தவறாமல் நம்மளை நம்பி , இங்கே வர்றானே , இவனுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்க வைக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை - அவனே சீக்கிரம் அனுப்ப வேண்டும். கண்டிப்பாக அனுப்புவான், நிச்சயமா அது நடக்கும்...


அதல பாதாளத்தில் விழுந்து விட்டோமே என்று கலங்கி நிற்க வேண்டாம். தோல்விகள் மாதிரி ஒரு நல்ல படிப்பினையை உங்களுக்கு யாரும் கற்றுத் தர முடியாது. சிகரம் நீங்கள் தொடுவது உறுதி..!


தோல்விகளில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் நீங்கள் சீக்கிரம் முன்னுக்கு வர, சில எளிய யோசனைகளை இப்போது கூறுகிறேன்...


மது , மாமிசம் இனிமேல் மறந்தும் தொட வேண்டாம். எல்லா ஜீவ ராசிகளுக்கும் வினைப் பயன் உண்டு. ஆடு, கோழிகளை நாம் உண்ணும்போது, அவற்றின் பாவத்தையும் நாம் சேர்ந்து சுமக்கப் போகிறோம். நம் பாவத்தை கரைக்கவே இன்னும் எவ்வளவு கஷ்டங்களோ..? அக்பர் சொன்னது போல, நம் வயிறு பிணங்களைப் புதைக்கும் சுடுகாடாக இருக்க வேண்டாம்.


வாரம் ஒரு முறையாவது , உங்கள் மனதுக்கு நிம்மதி  அளிக்கும் ஒரு கோவிலுக்கு சென்று, ஒரு மணி நேராமாவது அங்கே, மனமுருக இறைவனை வேண்டுங்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு ஸ்தல விருட்சம் உள்ளது. அந்த விருட்சம், இறைவன் அமர்ந்து இருக்கும், கர்ப்ப கிருகத்திற்கு சமம்.  உங்கள் தீய வினைகளை ஈர்த்து , உங்கள் வினைச் சுமையை குறைக்கும். எல்லாராலும், கர்ப்ப கிருகத்தினுள்ளே செல்ல முடியாது. ஆனால், ஸ்தல விருட்சத்தின்  அடியில் அமரலாம். அங்கு அமர்ந்து, நீங்கள் ஜெபிக்கும் மந்திர ஜெபம் , அளவில்லாத ஆற்றலுடன், உங்களை கவசம் போல் பாதுகாக்கும். ஆலயங்கள் ஆற்றலுடன் திகழ , கோபுர கலசமும், ஸ்தல விருட்சமும் தான் மிகப் பெரிய காரணிகள். 


ஜாதி மத இன வேறு பாடின்றி , இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் ஜெபிக்க வேண்டிய மந்திரம் . ஓம். பிரணவ மந்திரம். சிவ சிவ என்று ஜெபிக்கும்போது உங்களுக்கு கர்ம வினைகள் அழிய ஆரம்பிக்கும். ஆனால், சிவ சிவ மந்திரம் உங்களுக்கு பற்று, பாசத்தை  அழித்து துறவறத்தை நோக்கி இட்டுச் செல்லும். குடும்பஸ்தர்களுக்காகிய நமக்கு இந்த மந்திரம் சரிப் படாது. மகான் மிஸ்டிக் செல்வம் ஐயா, அவர்கள்  தன ஒட்டுமொத்த வாழ்வையே ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டு , கண்டறிந்த மகத்தான மந்திரம் " ஓம் சிவ சிவ ஓம் " , சிவ சிவ மந்திரத்துக்கு முன்னும் , பின்னும் ஓம் சேரும்போது , அதன் சக்தி அளவிட முடியாத அளவுக்கு பன்மடங்கு ஓங்கி விடுகிறது. பல உயரிய வேத மந்திரங்களுக்கு இணையானது இந்த மந்திரம். வேதங்களை கற்று உணர, நமக்கு பாக்கியம் உண்டோ , இல்லையோ தெரியாது. ஆனால் , உரிய நேரத்தில் இந்த மந்திரம் கிடைத்த வகையில் , நாம் ஒவ்வொருவரும் பாக்கியசாலிகளே. 


தினமும் , குறைந்தது பத்து நிமிடம் காலையிலும், இரவிலும் ஜெபிக்க ஆரம்பியுங்கள். அவனுள் தொடங்கி, அவனுள் முடிவதே உலகம். ஒரு நாளை தொடங்கும்போதும், முடிக்கும்போதும் இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக, நேரத்தை நீங்கள் பின்னர் அதிகரித்துக் கொள்ளலாம். எந்த மந்திரமும், ஒரு லட்சம் முறை ஜெபித்த பிறகே, தன் சக்தியைக் காட்டத் தொடங்கும். 


அதன் பிறகு பாருங்கள், உங்களுக்கு நடக்கும் அற்புதத்தை..!  உங்கள் வாழ்க்கையே , ஜெபிக்கும் முன், ஜெபித்த பின் என்று பிரித்து உணர முடியும்... வஞ்சனை இல்லாது, நீங்கள் உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் , இந்த மந்திரத்தை கற்றுக் கொடுங்கள். ஜெபம் பண்ணும்போது, மஞ்சள் துண்டு, வேஷ்டி , கையில் ருத்திராட்சம் இருந்தால் மிக நல்லது, ஜெபித்த பிறகு - தண்ணீர் அல்லது இளநீர் , அவசியம் அருந்துங்கள். அது, உங்கள் மந்திர சக்தியை உங்கள் உடம்பிலே தங்க வைக்கும். எது இருந்தாலும், இல்லை என்றாலும், இந்த மந்திர ஜெபத்தை ஜெபிக்கலாம். பயண நேரங்களில் கண்டிப்பாக தவிர்க்கவும். நடந்து செல்லும்போதும் ஜெபிக்க வேண்டாம்..! 


அண்ணாமலை , சபரிமலை , மேலும் புனித பாத யாத்திரைகளில் ஜெபிக்கலாம். 


மாதம் ஒரு முறை - சதுரகிரி, அண்ணாமலை , உங்கள் குல தெய்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை பத்திரகாளி, முருகனின் அறுபடை வீடுகள், சமயபுரம், மதுரை, கொல்லிமலை , திருவாற்றியூர் , மயிலாப்பூர் , திருப்பதி, ஸ்ரீரங்கம் , காஞ்சிபுரம் போன்ற மேலும் இறை இன்றும் நடமாடும் பல பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் , ஏதாவது ஒன்றிற்கு , அவசியம் சென்று வாருங்கள். தமிழ் நாட்டில் சக்தி வாய்ந்த ஆலயங்கள் ஏராளமாக உள்ளன. 


தவறாமல் , ஆலய தரிசனத்தை பயன் படுத்திக் கொள்ளுங்கள். அந்த கால பழைய ஆலயங்கள் எல்லாம் , இன்றளவும் பல சித்தர்களின் நடமாட்டம் சூட்சுமமாக உள்ள இடங்கள். அவர்களின் ஒரே ஒரு பார்வை கூட, நம் பாவத்தை ஒரு நொடியில் போக்கிவிடும். போலி, பாசாங்கு இல்லாத , பகட்டு இல்லாத - உங்கள் நாம ஜெபம், பல மகா புருஷர்களின் தரிசனத்தை உங்களுக்கு நிகழ்த்தும். 
  
எந்த ஆலயம் சென்றாலும், அவசியம் இந்த மந்திர ஜெபத்தை செய்து வாருங்கள். ஸ்தல விருட்சத்தின் அடியில் , நீங்கள் ஜெபம் செய்யும்போது , பரவச உணர்வு உங்களுக்கு நிச்சயம் உண்டாகும். 


இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து - பிரம்ம முகூர்த்த வேளையில், இறைவனை தொழும் பழக்கத்தை , இயற்கையை ஆராதிக்கும் பழக்கத்தை ஆரம்பியுங்கள். இது, எல்லாவற்றிலும் மிக முக்கியமானது. நீங்கள் உங்களுக்கு கொடுத்துக் கொள்ளும், மிக சிறந்த பரிசு , இதுதான். கொஞ்சம் யோகா, கொஞ்சம் மூச்சுப் பயிற்சி , கொஞ்சம் தியானம், மந்திர ஜெபம். உங்கள் உடலும் , மந்திர உடலாகிவிடும். பஞ்ச பூதங்களையும், நவ கிரகங்களையும் நீங்கள் வசியம் செய்து விடலாம்..!



தினமும் ஒரு கைப்பிடி அரிசி  , இறைவனுக்கு என்று எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன், அதை சதுரகிரி போன்ற ஸ்தலங்களில் , அல்லது உங்கள் அருகில் இருக்கும் ஆலயங்களில் அன்னதான திட்டத்திற்கு சேர்த்து விடுங்கள்.. தினமும், வேறு ஒரு ஜீவ ராசிக்கு , சிறிதளவாவது உணவு இடுங்கள். ( காகம், நாய், பசு, உடல் ஊனமுற்ற, ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு ) . இது உங்கள் தலைமுறைக்கே நீங்கள் சேர்த்து வைக்கப் போகும் புண்ணியம்..! 




இந்த ஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தை - நம் வாசகர்கள் அனைவரும் , குறைந்தது பன்னிரண்டு புதியவர்களுக்கு , அறிமுகப் படுத்துங்கள்... இது மகத்தான, புண்ணிய காரியம். ஓம் சிவ சிவ ஓம் மந்திர அறிமுகத்தை , நோட்டீஸ் போல அச்சடித்து , ஆலயங்களில் வரும் பக்தர்களுக்கு, கொடுக்கலாம். 

எந்த ஒரு கலையையும், நீங்கள் கற்றுக் கொண்டு இருந்தால் , அதை தகுதி உள்ள பன்னிரண்டு பேருக்கு , நீங்கள் சொல்லிக் கொடுக்கும்போது , அந்த கலையில் நீங்கள் சகலகலா வல்லவராவது நிச்சயம் , என்பது விதி.....!




எங்கெங்கும் ஓம் சிவ சிவ ஓம் , அருள் அலை பரவட்டும்..! வைணவ சம்பிரதாயம் மேற்கொள்ளும் அன்பர்கள் ஓம் ஹரி ஹரி ஓம் என்றும் ஜெபிக்கலாம்..! பிறவிப் பயனை அடையுங்கள்.. ! நமக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் , கிடைக்கும் நேரத்தில் கிடைத்தால் போதாது... விரைவில் கிடைக்க வேண்டும்..!


இந்த கட்டுரை, இணைய உலகில் - தமிழ் கூறும் ஒவ்வொரு ஆன்மீக அன்பருக்கும் சென்றடைய உதவுங்கள். நீங்கள் வலைப்பூ வைத்து இருந்தால், இந்த கட்டுரையை பதிவிடுங்கள். அல்லது லிங்க் கொடுங்கள். நமது கட்டுரைகளை, தங்கள் வலைப் பூவில் - காப்பி , பேஸ்ட் செய்து கொள்ளலாமா என்று , நிறைய பேர் அனுமதி கேட்கிறார்கள். தயக்கமே வேண்டாம்..! யான் பெற்ற இன்பம் , பெருக இவ்வையகம்..! பூட்டி பூட்டி வைச்சு , நான் போகும்போது  கொண்டு போகப் போறது எதுவுமே இல்லை.   விருப்பம் இருந்தா நன்றி போட்டு  , லிங்க் கொடுங்க.... இல்லையா , நீங்களே போட்டது போல கூட போட்டுக்கோங்க.. நல்ல கருத்துக்கள் , நாலு பேரை சென்றடைந்தால் போதும்..! அதை நீங்கள் செய்தால் என்ன, நான் செய்தால் என்ன? 


உலகம் எவ்வளவு சீக்கிரமா , கேவலமா சீரழிஞ்சுக்கிட்டு இருக்குங்கிறது நான் சொல்லி , தெரிஞ்சுக்க வேண்டியது இல்லை. நாம மட்டும் நல்லா இருந்தா போதாது, சுற்றி இருக்கிறவங்களும் நல்லா இருந்தா, நாமும் நல்லா இருப்போம்..!  ஒரு ரவுடி கிட்ட ஒரு வருஷம் இருக்கிறதுக்கும், ஒரு முனிவர் கூட ஒரு வருஷம் இருக்கிறதுக்கும்   - கிடைக்கும் பலன்கள் எப்படி இருக்கும்னு , நமக்குத் தெரியாதா என்ன? இப்ப நாம எப்படிப் பட்ட ஒரு கூட்டத்தில் இருக்கிறோம் என்று ஒரு வினாடி நினைத்துப் பாருங்கள். 

நம்மை சுற்றி இருக்கிறவங்களுக்கும் - இந்த அருள் அலை பரவ , உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் ..! 


நாம் இந்த வாழ்வில் ஜெயிக்க வேண்டுமானால், தனி மனித ஒழுக்கம் , முழு நம்பிக்கையுடன் கூடிய இறை அர்ப்பணிப்பு, தெளிவான இலக்கு , அப்பழுக்கில்லாத திட்டமிடல் , சீரிய முயற்சி இருந்தாக வேண்டும். மெல்ல மெல்ல உறுதியான முன்னேற்றம் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்..!


நாம் எந்த மதத்தில், எந்த குலத்தில் பிறந்தோம் என்பது முக்கியமில்லை..! 




போகிற போக்கில் ஒரே ஒரு விஷயம் மட்டும். ஒவ்வொரு முறையும் அண்ணாமலை சென்று , அருணாச்சலேஸ்வரரை தரிசித்து ராஜ கோபுரம் வழியாக வெளியே வரும்போது, இடப் பக்கத்தில் நம் கண்களில் " இளைய ராஜா , ஜீவா அம்மையாரின்" பெயர்கள் தென்படும்.  

ராஜ கோபுரம் - புனருத்தாரணம் செய்ய , நிதி உதவி செய்தவர், இசை ஞானி - நடமாடும் சரஸ்வதி - இளைய ராஜா அவர்கள். மனிதன் பிறந்தது , ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தில் தான். ஆனால், மனிதனாகப் பிறந்ததற்கு , இதைவிட வேறு என்ன ஒரு சாதனை செய்ய வேண்டும்? 


அவரது சோதனைகள் கடந்த , இந்த சாதனைக்கு - மேலே போல்ட் லெட்டரில் கொடுத்து இருக்கிறேனே , அந்த குணங்கள் தான் காரணம்..!


நம் ஒவ்வொருவரும், இப்படிப் பட்ட பெருமைப் படத் தக்க காரியங்கள் செய்யும் அளவுக்கு, நம் மனசாட்சியே நம்மைப் பார்த்து பெருமைப் படும் அளவுக்கு ,  ஒரு நல்ல நிலை அடைய , அந்த இறைவனின் கருணை நிழல்  , நம் மீதும் விழட்டும்..! சத்தியமும், தர்மமும் நிலைக்கட்டும் !


இதற்க்கு நீங்கள் எடுத்து வைக்கும் முதல் படி தான்... ஓம் சிவ சிவ ஓம் ..! அதன் பின், அந்த இறை உங்களை வழி நடத்தும். இந்த மந்திர ஜெபமே, உங்கள் உடம்பில் உள்ள நாடி நரம்புகளில் ஊடுருவி , நவ சக்கரங்களையும் சுழலச் செய்யும். பல புண்ணிய யாத்திரைகள் செய்த பலன்களை , உங்கள் வீட்டில் இருந்தே கிடைக்கச் செய்யும்.  


இதை உணர்வுப் பூர்வமாக அனுபவித்து , உணர்ந்து உங்களுக்கு இதை தெரிவிக்கிறேன்..! இந்த அரிய, பொக்கிஷத்தை , நம் உலக நன்மைக்காக அருளிய ஐயா மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு, என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!


எந்த மந்திர ஜெபமும் , அமாவாசை தினத்தில் ஜெபிக்க ஆரம்பிப்பது நல்லது. ஆனால் , நல்ல காரியம் தொடங்க , இன்னும் பதினைந்து நாட்கள் பொறுக்க முடியாது.. இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள்..! இன்று ஒரு அபூர்வ சக்தி நிறைந்த தினம். புரட்டாசி மாத பௌர்ணமி. தந்தையும் , மகனுமான - மாபெரும் கிரகங்களான சூரியனும் , சனியும் இணைந்து , சந்திரனை பார்வை இட விருக்கிறது.. !

தந்தை , மகன் உறவு சுமூகமாக இல்லாதவர்கள் , குடும்ப ஒற்றுமை மேலோங்க இந்த நாளின் பௌர்ணமி வழிபாட்டை பயன் படுத்திக் கொள்ளவும்.  விதி வசத்தால் தந்தையை இழந்து - தவிப்பவர்கள், புத்திர சோகத்தால் தவிப்பவர்கள், கர்ம வினைகளால் - தந்தையும், பிள்ளையும் இருந்தும் அநாதை போல தவிப்பவர்கள் , குழந்தை பேறுக்காக காத்து இருப்பவர்கள், குழந்தை வரம் வேண்டி நீண்ட நாள் தவித்துக் கொண்டு இருப்பவர்கள் , அரசு வேலைக்காக போராடிக்கொண்டு இருப்பவர்கள்,  ஏழரை , அஷ்டம சனியால் , புதை குழியில் விழுந்து தத்தளிப்பது போல தவிப்பவர்கள், மேலும் வாழ்க்கையில் முன்னேற துடிக்க தவிப்புடன் போராடும் அத்துணை பெரும் - இன்றைய பௌர்ணமி தின வழிபாட்டை , நம்பிக்கையுடன் செய்யுங்கள்..!  மனம் உருக , ஓம் சிவ சிவ ஓம் ஜெபியுங்கள்..! 

அந்த சிவம் உங்களை கவனித்துக் கொள்ளும்..! மீண்டும் இப்படிப் பட்ட நாள் வர இன்னும் பதின் மூன்று மாதங்கள் நீங்கள் காத்து இருக்க வேண்டும்..!



நம் முன்னோர்களின் ஆசியை முழுவதும் பெற்று, அவர்களின் மனம் குளிர , அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் அளவுக்கு, ஒரு நல்ல நிலைமைக்கு நாம் சென்று அடைய , கன்னி ராசியில் சூரியன் நிற்பதால் ஏற்படும் இந்த பௌர்ணமி நன்னாள் , நமக்கு துணை நிற்கட்டும்..! 


இனி வர விருக்கும் ஒவ்வொரு நாளும் , புதுப் பொலிவை நமக்கு கொண்டு வர, அந்த இறையருள் என்றும் நம் துணை நிற்கட்டும் ..! 

நினைத்தாலே துயர் துடைக்கும், நம் அன்னை பத்திரகாளியின் அருள் நிழல் , நம் ஒவ்வொருவரையும் வழி நடத்தட்டும்!


மகத்தான , ஒரு ஆன்மீக பரவச அனுபவத்துக்கு தயாராகுவோம் !  


வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் ! 

Read more: http://www.livingextra.com/2011/10/blog-post_11.html#ixzz1aaJ27Mun

No comments:

Post a Comment